Tuesday, 27 June 2017

பிக் பாஸ் - The Real Bigg Boss


அமெரிக்காவில் ஆரம்பித்து , இந்தியாவிற்கு வந்து, தற்போது தமிழக மக்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்யும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் தமிழிலும் வந்திருக்கிறது. வித்தியாசமான துறையில் உள்ளவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் கொண்ட கலவையாக 15 பேர் கொண்ட குழு ஒன்று தயார்செய்யப்பட்டு, அவர்கள் 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கியிருக்கவேண்டும். அந்த 100 நாட்களும் செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற எந்த எலக்ட்ரிக் சாதனங்களும் பயன்படுத்த முடியாது. வெளியுலகத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பார்கள். நிர்வாகத்தினர் பங்கேற்பவர்களுக்கு கொடுத்திருக்கும் பொருட்களைத் தான் பயன்படுத்த முடியும். 
இந்த 100 நூறு நாட்களில் அவர்களுக்குள் நடக்கும் மோதல், காதல் , வாக்குவாதங்கள் , தனிப்பட்ட நடைமுறைகள் எல்லாம் காரசாரமாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவார். அநுசரிப்பது, மற்றவர்களோடு பழகுவது, பிறரை மகிழ்விப்பது, சமயோசிதமாக முடிவெடிப்பது போன்றவற்றின் அடிப்படையில் மக்கள் ஆதரவோடு ஒருவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு பரிசுகளும், பணமும் உண்டு. 

இந்த ஷோவில் மிக முக்கியமான விஷயம், கழிப்பறை குளியலறை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட 30 கேமராக்கள் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும். பேச்சுக்கள் எல்லாம் ஒட்டுக்கேட்படும். அவற்றில் முக்கியமானவற்றை டி.வியில் ஒளிபரப்பவும் செய்யும். பொதுவாகவே அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று ஆவென்று பார்க்கும் தமிழக மக்களுக்கு , இந்த 100 நூட்களும் கொண்டாட்டம் தான். சரி பிக்பாஸ் பற்றி நான் எழுதியதன் காரணம் என்ன? விஷயத்திற்கு வருகிறேன்.
பிக்பாஸ் அல்லது பிக்பிரதர் நிகழ்ச்சி, ஏதோ ஒரு வீட்டிற்குள், 100 நாட்கள், 15 பேர், 30 கேமரா என்று நடைபெறுகிறது. ஆனால் உண்மையில்,நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையுமே பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 

பிக்பாஸ் நிகழ்ச்சியே நம்ம வாழ்க்கையின் மினியேச்சர் தான்.


நம்ம பிக்பாஸ் யாரு? வேற யாரு பாஸ_க்கெல்லாம் பாஸான இயேசு தான் நம்ம பாஸ{.இந்த உலகம் தான் அந்த வீடு. இயேசு நமக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துவிட்டு பிறகு தான் மனிதனைப் படைத்தார். இந்த உலக வீட்டில் நமக்குத் தேவையான எல்லாமே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிலுள்ள எந்த பொருளையும் சேதப்படுத்தக் கூடாதாம். ஆம் நாமும் இயற்கையை நாசமாக்காமல் வாழவேண்டும்.  பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.ஆதி 1:28

100 நாட்கள் நடக்கும் ஷோ, 80 வருடங்கள் நடக்கிறது. அந்த 80 வருடங்களில் நமக்கு தேவையானவற்றையெல்லாம் இயேசு நமக்கு தருகிறார். நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கின்றன. மகிழ்ச்சியான, சோகமான சம்பவங்கள் நடக்கின்றன. மூத்தோரின் அனுபவங்கள் நமக்கு உதவியாகின்றன. எப்படியாவது நமது காலத்தை ஓட்டிவிட வேண்டும். அதுமட்டுமல்ல, போராடிக்கொண்டிருக்கும் மற்றவருக்கும் நாம் தான் உதவ வேண்டும். இயேசுவே வழி என்று காட்டவேண்டும். அதற்கும் மதிப்பெண்கள் உண்டு. சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.1கொரி 9:16

15 பேர் கொண்ட குழு , கிட்டத்தட்ட 700 கோடிக்கும் மேற்பட்ட மக்களாக இருக்கிறார்கள். அவர்களோடு நாம் வாழும் நாட்களில் நாம் அனுசரித்துப்  போகவேண்டியுள்ளது. நமக்கு மற்றவர்களின் நடவடிக்கை பிடிக்கிறதோ இல்லையோ, நாம் மற்றவர்களை சொல்லாலோ செயலாலோ காயப்படுத்தி விடக் கூடாது.  தேவன் நமக்கு நல்ல உறவுகளை, நண்பர்களை, நலம்விரும்பிகளைத் தந்திருக்கிறார். அவர்களோடு இருக்கின்ற காலத்தில் உறவாடவேண்டும். யாரையும் பகைத்து நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நமது வாழ்வை வண்ணமயமாக்கவே தேவன் உறவுகளையும் மனிதத் தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். காதல், மோதல் , வாக்குவாதம் , சண்டை, பொறாமை, பெருமை எல்லாம் இருக்கும் தான் . நாம் அதையெல்லாம் மேற்கொள்ள வேண்டும். உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.மத் 19:19

30 கேமராக்கள் அவர்களைக் கண்காணிப்பது போல, பல நூறு கண்கள் நம்மை கண்காணிக்கின்றன. தேவதூதர்கள் குறிப்பெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மற்ற மனிதர்களும் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் எதைச் செய்தாலும் அது பதிவாகிக்கொண்டே இருக்கிறது. யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு நாம் தனிமையில் செய்ததெல்லாமே ஒருநாளில் வெட்ட வெளிச்சமாகும். எல்லாம் தேவனுடைய கண்காணிப்பில் இருக்கிறது. அங்கு வேஷமெல்லாம் போடமுடியாது. நாம் எப்படி நடந்துகொண்டோமோ அப்படியே காண்பிக்கப்படுவோம். ஆகாயத்தில் ஏறிப்போனாலும், பாதாளத்தில் படுக்கை போட்டாலும் அவருடைய பார்வையிலிருந்து தப்ப முடியாது. கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.2நாளா 16:9

சிலர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இது நமக்கு வேதனை தரக் கூடியதாக இருந்தாலும், நாம் நமது பாதையில் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். சிலரின் பிரிவு நம்மை மிகவும் பாதிக்கலாம். சிலரைப் பற்றிய பழைய நினைவுகள் நமது இதயத்தை அரித்துக்; கொண்டிருக்கலாம். அதை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு நமது பாதையில் நாம் கவனம் செலுத்தவேண்டும். தேவனைத் தவிர , யாரையும் எப்போதும் அதிகமாக சார்ந்து கொண்டிருக்க கூடாது. கவனம், நாம் சார்ந்திருக்கிறவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.சங் 118:8

சிலநேரங்களில் நாமும் கூட வெளியேற்றப்படலாம். எப்போது நமது நாட்கள முடிகிறதென்று தெரியாததினாலே நாம் இருக்கின்ற காலத்தை பயன்படுத்துவது நல்லது. ஒருமுறை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டோமென்றால், பிறகு அங்கு திரும்பிச் செல்லவே முடியாது. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,எபி 9:27

அநேக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். கவனம், நமது நோக்கம் சிதறிப் போய்விடக் கூடாது. இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு அதிகாரம் இருந்தாலும், எல்லாம் நமக்கு தகுதியாயிராது. தகுதியானதில் மட்டும் கவனம் வைக்கவேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.பிலி 3:14

பரிசுப் பொருட்கள் , அந்த நாட்கள் முடிவடையும்போது, சிறப்பாக செயல்பட்டவருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். பரிசு என்றால் சாதாரண பரிசு அல்ல. மிகச் சிறந்த பரிசு. நம்ம நிகழ்ச்சியில் வென்றால் நித்திய ஜீவன் பரிசாக அளிக்கப்படும். மட்டுமல்ல பொற்கிரீடங்களும், நவரத்தினங்களும் பரிசாக அளிக்கப்படும். நமது காலம் முடிந்தபிறகு தான் பரிசு கிடைக்கும் என்பதை கவனத்தில் வைக்கவேண்டும். இப்பொழுதே பரிசு வேண்டும் என்று அடம்பிடிப்பது அறிவீனம். தண்டனையோ பரிசோ வாழ்வு முடிந்தபின் நிச்சயம் உண்டு. இவ்வுலக வாழ்விலும் சில போனஸ் பாயிண்ட்ஸ் உண்டு. இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.வெளி 22:12


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் , நம்ம பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ஒத்துப்போகாத ஒரே ஒரு விஷயம் இருக்கு. அது , இந்த பிக்பாஸ் 100 நாள்னு ஒரு கணக்கு இருக்குது. ஆனா நம்ம நிகழ்ச்சில நம்ம பிக்பாஸ் எப்போ வேணா வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கிறாரு. அவர் வரும்போது என்னென்ன நடக்கும்னும் சொல்லியிருக்கிறாரு. அது எல்லாமே இப்போ நடந்திட்ருக்கு.அவர் வந்தவுடனே நிகழ்ச்சி முடிஞ்சிரும். எனவே இருக்கிறவரை உண்மையா இருப்போம். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். மத் 25:13


"நான் தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சில ஜெயிப்பேனு நம்பிக்க இருக்கு. ஏன்னா என் அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரு எனக்காக. அவரு கைல காலுல எல்லாம் ஆணி அடிச்சாங்க. ஒரு பெரிய ஈட்டிய அவரு விலாவில குத்துனாங்க. ரொம்ப அடிச்சாங்க . ஆனா எல்லாத்தையும் அவர் எனக்காக பொறுத்துக்கிட்டாரு.  என் மேல ரொம்ப நம்பிக்க வச்சு  இந்த உலகத்துக்கு என்ன அனுப்புனாரு. அந்த நம்பிக்கைய வீணடிக்கமாட்டேன். நான் நிச்சயம் ஜெயிச்சு, பரிச அவர்ட்ட காட்டுவேன் . நான் அவருக்கு உண்மையா இருக்கிறதால ஜெயிச்சுருவேன்னு நம்பிக்க இருக்கு."

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 1கொரி 9:24

Wednesday, 21 June 2017

தேவ சித்தத்தை அறிந்துகொள்வது எப்படி? Theva sitham arinthu kolavthu epadi?

வேதம் இவ்விதமாய்ப் பதிவு செய்கிறது, ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.எபே 5:17

தேவனுடைய சித்தத்தை  உணர்ந்து செயல்படுவதே இக்கடைசி காலத்தின்
இன்றியமையாத தேவையாயிருக்கிறது. அது சரி, தேவனுடைய சித்தம் என்றால் என்ன? அதனை அறிந்து கொள்வது எப்படி? தேவ சித்தத்திற்கும், சுயசித்தத்திற்கும் , பிசாசின் திட்டத்திற்குமிடையேயான வித்தியாசத்தை  கண்டுணர்வது எப்படி? இது பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்

  முதலாவது , கிறிஸ்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தையான சித்தம் என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன? சித்தம் என்பதை விருப்பம், திட்டம் , நோக்கம், எண்ணம், நினைவு  போன்ற வார்த்தைகளில் நாம் புரியலாம். 

நாம் இந்த உலகத்தில் பிறந்த விதத்தை நோக்கினால், அது மிகவும்
ஆச்சரியகரமானது. பல இலட்சம் அணுக்களோடு போட்டியிட்டு வென்று, பத்து மாதம் கருவறையின் சவால்களை முறியடித்து, இந்த உலகில் ஜனிக்கிறோம். இதனை ஒரு சாதாரண சம்பவமாக நாம் நினைக்கலாம். ஆனால் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் மேலும் பிரத்யேகமான தேவதிட்டம் என்ற ஒன்று இருக்கிறது. "என் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது".சங் 139:16. தாயின் கருவில் இருக்கும்போதே  நம்மைக் குறித்து தேவன் மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். அதனால் தான் நம்மை பிறக்கச் செய்திருக்கிறார். இதை வாசிக்கிற இந்த நொடிப் பொழுதில் நாம் உயிரோடிருப்பதற்கு காரணமும் தேவசித்தம் தான்.

நாம் நம்முடைய விருப்பங்களின்படியும்,திறமைகளை நம்பியும்,  குடும்பகட்டுமான அடிப்படையிலும், சுற்றுப்புற சூழ்நிலையைக் கொண்டும் நமக்கென்று சில திட்டங்களை வகுத்து அது நிறைவேற பிரயாசப்படுகிறோம். ஆனால் நம்மை உருவாக்கிய  தேவன், நமக்கென்று ஒரு திட்டத்தை வைத்து அதற்கேற்ற பாதையில் நமது சூழ்நிலைகளை உருவாக்கி நம்மை நடத்துகிறார். 

நாம் நமது கடந்தகால நினைவுகளையும், நிகழ்கால் நிகழ்வுகளையும் கொண்டு நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறோம். நமது தேவனோ, நம் எதிர்கால வாழ்வைக் கருத்தில் கொண்டு நமது நிகழ்காலத்தை நிர்மாணிக்கிறார்.

  சுருங்கச் சொல்லின், நமக்கான ஓட்டத்தில் நாம் ஓடுகிறோம். தேவன் அவர்
நம்மை உருவாக்கியதற்கான  ஓட்டத்தில் நம்மை நடத்துகிறார்.  நம் நினைவுகள் அவர் நினைவுகள் அவர் நினைவுகள் அல்ல. நம் வழிகள் அவருடைய வழிகள் அல்ல. ஆனால் அவருடைய வழிகள் நம்முடைய வழிகளை விட மிகவும் பெரியவைகள் (ஏசா 55:8,9).  நாம் நமக்கென்று வைத்திருக்கிற திட்டங்களை விடவும் அவர் நமக்கென்று வைத்திருக்கிற திட்டம் பெரியது. இந்த உலகத்தில் நம்மை உருவாக்கியிருப்பதற்கு அவர் மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார்.

தேவன் நம்மேல் வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்;ற தேவன் விரும்ப, அந்த நோக்கத்தை சிதைக்க பிசாசு கடினமாக முயன்றுகொண்டிருக்கிறான். தேவன் நம்மை தொந்தரவு செய்யாமல், நமது போக்கிலே விடுவார். உள்ளே நுழைய அதிகாரமிருந்தும் வாசற்படியில் நின்று தட்டிக்கொண்டிருக்கும் நாகரீகமான தேவனல்லவா அவர்? அவருடைய சாயலின் படி நம்மை உருவாக்கினார். அவருடைய சாயல் என்பது உடல் அமைப்பை அல்ல. குணநலன்களையே குறிக்கும். அவரது குணங்களில் ஒன்றான சுயாதீனம் நமக்கும் இருக்கிறது. எனவே சுயாதீனமாக நாமாக முடிவெடுக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார். இப்படி தேவன் டீசன்டாக விலகி நிற்கிறார்.  பிசாசாலேயோ நாம் இடங்கொடாமல் நம்மைக் கொண்டு எதுவும் செய்யமுடியாது. தேவனின் நோக்கத்திற்கும், பிசாசின் சூழ்ச்சிக்கும்  இடையே முடிவெடுக்க வேண்டியது நாம்தான். அது தேவனின் சித்தமாகவும் இருக்கலாம். நம் சுய விருப்பமாகவும் இருக்கலாம். பிசாசின் சூழ்ச்சித் திட்டமாகவும் இருக்கலாம். அன்று ஆதாமுக்கிருந்த அந்த வாய்ப்பு இன்று நம்மெல்லாருக்கும் இருக்கிறது. பழத்தை சாப்பிடக் கூடாது என்று சொன்ன தேவன் ஒருபுறம், பழத்தை சாப்பிடச் சொன்ன பிசாசு ஒருபுறம், பார்வைக்கு இன்பமாயிருக்கிற பழத்தின் மேல் நமக்கிருக்கும் விருப்பம் ஒருபுறம். இதில் முடிவெடுக்க வேண்டியது நாம் தான். 


நம் வாழ்வின் சிறிய முடிவுகள் தான், 
பெரிய அழிவிற்கும், உயர்விற்கும் காரணமாக அமைகின்றன.

சிம்சோனையும், தாவீதையும் தேவன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே தெரிந்து கொண்டார். ஆனால் தாவீது தேவ சித்தத்தை செய்ய, சிம்சோனோ தன் சுய விருப்பத்தால் பிசாசின் வஞ்சனையால் விழுந்து போனான். அவன் விழுதலுக்கான முடிவை அவனே தான் எடுத்தான். யூதாஸ் தனக்கான முடிவைத் தானே தான் தேடிக்கொண்டான். 

  அதெல்லாம் சரி தான். அவருடைய சித்தத்தை நாம் அறிந்துகொள்வது எப்படி? இப்போது இதுதான் மிகப்பெரிய கேள்வி. அவருடைய சித்தம் என்ன என்பது  தெரிந்தால் தானே அதைச் செய்யமுடியும். பதில் மிக எளிமையானது. நாம் மற்ற மனிதரின் எண்ணங்களை  எவ்வாறு அறிந்துகொள்கிறோம்? நம்மைப் பற்றி அவர் என்ன சிந்திக்கிறாரென்பதை எப்படி அறிந்துகொள்ள முடிகிறது? அவரைப் பார்க்கும் போது, அவரோடு பழகும்போது, அவரோடு பேசும்போது தான். அதுபோலவே தேவனின் நினைவை நாம் அறிந்து கொள்ளவேண்டுமென்றால், தேவனோடு நாம் பழகவேண்டும். அவரோடு நாமும், நம்மோடு அவரும் பேசவேண்டும். அவரோடு நாம் ஜெபத்திலும், நம்மோடு அவர் வேதம் மூலமாகவும் பேசமுடியும்.

  இப்படி நேரடியாக அவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்வது தான், அவரது
சித்தத்தை நாம் அறிந்துகொள்ள சிறந்த வழி. வேதம் மூலமாக அவர் நம்மோடு அவரது சித்தத்தை வெளிப்படுத்துவார். வேத வசனங்களை பொதுவாக இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1.லோகோஸ், 2.ரேமா . இதில் லோகோஸ் என்பது அச்சிடப்பட்ட வேத வசனங்களை அப்படியே குறிப்பிடுவதாகும். ரேமா என்பது அந்த நேரத்தில் நமக்கு தேவையான வசனங்கள் ஜீவனோடு செயல்படுவது. உதாரணத்திற்கு, வீடு கட்டவா? வேண்டாமா? என்று யோசித்து, அதற்கான பதிலை வேதத்தில் ஆராய்ந்தால், வீடு கட்டு எனும் வசனமும் வேதத்தில் இருக்கிறது. வீடு கட்டாதே எனும் வசனமும் வேதத்தில் இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் நமக்கான வசனம் எது என்பதை அதை எழுதிய தேவனிடமே நாம் கேட்டால், தேவன் நமக்கு அதை உறுதிப்படுத்துவார்.

  ஜெபம் இல்லாத வேத வாசிப்பு நம்மை குழப்பிவிடும். 
போலவே வேதவாசிப்பு இல்லாத ஜெபமும் பிரயோஜனமற்றதாகிவிடும்

எப்படி ஜெபிக்கவேண்டும் என வேதத்தின் மூலமாகவும், எப்படி வேதத்தை அர்த்தப்படுத்துவது என்பதை ஜெபத்தின் வாயிலாகவும் தான் நாம் அறிந்துகொள்ளமுடியும். 

நம்முடைய பார்வை மிகக் குறுகலானது. நம்முடைய மூளையும் கூட சிக்கலான நேரங்களில் சிந்திக்காது. 

பொதுவான தேவசித்தம் வேதத்தில் பல இடத்தில் இருக்கிறது. ஆனால் உங்களுக்கான பிரத்யேகமான தேவசித்தத்தை அறிந்துகொள்ள, வேதத்தை  அதன் ஆக்கியோனாகிய இயேசுவின் துணையோடு படியுங்கள். இயேசுவிடம் உங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள். என் விருப்பம் வேண்டாம். உம் சித்தமே நடக்கட்டும் என்று தினமும் தேவனிடம் கேளுங்கள். உங்களை உருவாக்கிய உன்னத நோக்கத்தை அவர் நிறைவேற்றுவாராக. ஆமென்.

Tuesday, 20 June 2017

பின்மாற்றத்திலிருந்து மீள்வது எப்படி? pinmaatram


  தேவனோடு உள்ள உறவிலிருந்து பிளவு ஏற்படுவதே பின்மாற்றம் ஆகும். பொதுவாக பின்மாற்றம் ஏன் வருகிறது என்று நாம் ஆராய்ந்தால், நம்முடைய கீழ்ப்படியாமையினாலும் பாவத்தினாலேயுமே தேவனை விட்டு நாம் விலகிவிடுகிறோம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள், தேவன் நம்மை விட்டு விலகவில்லை, நாமே அவரை விட்டு விலகுகிறோம். இயேசுகிறிஸ்து நம் எல்லாருக்காகவும் அடிக்கப்பட்டு, நம் அனைவருக்காகவும் இரத்தஞ்சிந்தினார். நாம் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே அவருடைய விருப்பமாயிருக்கிறது (1தீமோ 2:4). எனவே நம் தேவன் எப்போதும் நமக்காக ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறாரென்பதை முதலாவது நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

  அவர் பாவிகளை அல்ல, பாவத்தையே வெறுக்கிறார். பாவிகளை நேசிக்கிறார். பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழைக்கவே அவர் வந்தார் (மத் 9:13). ஆனால் பிசாசின் தந்திரம் என்னவென்றால், ‘நாம் பாவஞ்செய்துவிட்டோம், இனி அவ்வளவு தான், தேவன் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவார்” என்ற எண்ணத்தை வாலிபர்களாகிய நமது இதயத்தில் விதைத்துவிடுவதே. தேவன் நம்மையல்ல, நமது பாவத்தையே அவர் முதுகுக்கு பின்பாக எறிந்துபோடுவார் (ஏசாயா 38:17). 

பிசாசின் நோக்கம் நம்மை பாவஞ்செய்ய வைப்பது மட்டுமல்ல, தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் விலகச்செய்து விடுவதே. 

ஆதாம் பாவஞ்செய்தான், தேவன் வரும்போது அவரோடு
உறவாடமுடியாமல் வெட்கி நின்றான். நாமும் பாவஞ்செய்துவிட்டு தேவனோடு உறவாட முடியாமல் நம்மை நாமே மறைத்துக்கொள்கிறோம். ஆலயத்திற்கு செல்வதற்கு வெட்கம், ஊழியர்களை சந்திக்க தயக்கம், வேதத்தை தொடவே பயம், இப்படி தேவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச்சென்று விடுகிறோம். இவ்வாறு தேவனை விட்டு விலகிச் செல்வது நம்முடைய பாவங்களை அதிகரிக்கத்தான் செய்யுமே அல்லாமல் குறையச்செய்யாது. நாளாக, நாளாக தேவன்; நம்மேல் வைத்திருக்கும் மேலான நோக்கத்தை விட்டு வெகுதூரம் சென்றிருப்போம்.


  தாவீதும், சவுலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சூழ்நிலையை சந்தித்தார்கள். சவுலை சாமுவேல் கண்டிக்கும்போது, சவுல் சாமுவேலிடம் நீர் என்னை கனம்பண்ண வேண்டும் என்கிறார்( 1 சாமு15:30). ஆனால் தாவீதோ நாத்தானால் எச்சரிக்கப்படும்போது, எல்லார் முன்பிலும் பாவஞ்செய்ததை ஒப்புக்கொண்டு (2 சாமு 12:13) தேவனோடு சீர்பொருந்தினான். பாவஞ்செய்தால் அதை அறிக்கை செய்து விட்டுவிட்டால் நாம் இரக்கம் பெறுவோம் (நீதி 28:13). எனவே நாம் எப்படிப்பட்ட பாவிகளாயிருந்தாலும் அவரை விட்டு ஓடக்கூடாது. அவரை நோக்கி ஓட வேண்டும். ஏனென்றால் உலகத்தின் சகல பாவங்களையும் நீக்கக்கூடியவர் இயேசு மட்டுமே(1 யோ 1:7)

இனி தேவன் என் ஜெபத்தைக் கேட்க மாட்டார், என்னை கைவிட்டுவிடுவார் என்கிற எண்ணத்தை முதலாவது மாற்ற  வேண்டும். 
நான் பாவியாயிருப்பதால் தேவன் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று சொல்வது, நான் வியாதியாயிருப்பதால் மருத்துவர் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று சொல்வதற்குச் சமம்.  

நாம் அவரை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி ஓடி வந்து நம்மை அணைத்துக் கொள்வார். இளையகுமாரன் வீட்டிற்கு பயந்து தயங்கி வந்தபோது, தகப்பனார் ஓடி வந்து அணைத்;ததைப் போல, நாம் அவரிடத்தில் நெருங்குவதற்கான சிறு சிறு முயற்சிகளை எடுக்கும்போது, அவர் நம்மை ஆட்கொண்டு நடத்துவார். 

நான் நீதிமானான பிறகு தேவனிடம் வருவேன் என்று சொல்லாதே
தேவனிடம் வந்தால் தான் நீ நீதிமானாக மாற முடியும்.


‘என்னால ஜெபிக்க முடியல”  , ‘பைபிள கைல எடுத்தாலே தூக்கம் வருது”, ‘முந்தி மாதிரி தேவன நேசிக்க முடில”  இதெல்லாம் பின்மாற்றக்காரர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள். தேவன் நம்;மோடு செய்த உடன்படிக்கையை ஒருநாளும் மறப்பதில்லை. வேதத்தில் விசுவாசிக்க முடியாத மனநிலையில் இருக்கும் ஒருவர் ‘ஆண்டவரே என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும்” (மாற்கு 9:24) என்று கேட்டதும் உடனே தேவன் உதவினார். அதுபோல நாமும் தேவனே நான் உம்மை நேசிக்க உதவி செய்யும், ஜெபிக்க உதவி செய்யும், ஊழியம் செய்ய உதவி செய்யும் என்றெல்லாம் அவரிடமே கேட்கும்போது நிச்சயம் தேவன் உதவி செய்வார். சர்வவல்லவரிடத்தில் நாம் மனந்திரும்பினால் திரும்பவும் கட்டப்படுவோம் (யோபு 22:23). உலர்ந்து போயிருக்கும் நம் வாழ்வை செழிப்பாக்க நம் இயேசுவால் மட்டுமே முடியும்.


‘நாளை நாளை” என்று நாளை தள்ளிக்கொண்டிராமல்,
இன்றே இயேசுவோடு சீர்பொருந்துவோம். தேவனுடைய வருகை சமீபமாதலால், அவரை இன்றே தேடுவோம். நம்மை அறிந்த, நம்மைப் புரிந்த தேவன் அவர். பின்மாற்றத்திலிருந்து மீளவேண்டும் என்கிற உங்களின் இதய தாகத்தை அவர் அறிந்திருக்கிறார். எனவே இப்பொழுதே அவரை நோக்கிப் பாருங்கள். மனம்விட்டு அவரோடு பேசுங்கள். சிறுபிள்ளையைப் போல உங்களைத் தாழ்த்துங்கள். தேவனைவிட்டு பிரிக்கும் காரியத்தை வேரோடு பிடுங்கி எரியுங்கள். அவரோடு சீர்பொருந்த விடாதபடி பிசாசு ஏற்படுத்துகிற எல்லாத் தடைகளையும் வைராக்கியத்தோடு மேற்கொள்ளுங்கள். வெற்றி நமதே...... நம்மை காண்கிற லகாய்ரோயி ,நம் தாகம் தீர்க்க நீரூற்றாய் வருவார். ஆமென்....



ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக@ இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.வெளி 2:4,5
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்@ தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.வெளி 2:21

Monday, 19 June 2017

செயல்படும் கிறிஸ்தவன்



  திட்டமிடுதலும் செயல்படுதலும் கிறிஸ்தவ வாழ்வின் இரு பக்கங்களாகும். அநேக கிறிஸ்தவர்கள் திட்டமிடாமலே செயல்படத் துடிப்பர். முடிவில் தோல்வியே மிஞ்சும். இன்னும் சிலரோ திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள். செயலில் இறங்கவே மாட்டார்கள். இதுவும் வீண்தான். பெரும்பாலான வாலிபர்கள் இரண்டாம் ரகத்தைச்  சேர்ந்தவர்கள் தான். சபையில் மிஷனரியைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும் பிரசங்கியார் பேசும் போது கர்த்தருக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று துடிப்பார்கள். கர்த்தருக்கென்று செய்ய பல காரியங்களைத் திட்டமிடுவார்கள். ஆனால் வீட்டிற்கு வந்ததும், மீண்டும் பழைய கதை தான். 

  இந்த கடைசி காலத்தில் , கர்த்தருக்கென்று வைராக்கியமாய் செயல்படும் வாலிபர்களைத் தான் தேவன் தேடிக் கொண்டிருக்கிறார். காலம் சமீபமாயிற்று. அவருடைய வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இந்நேரத்தில் நம் திட்டங்களையெல்லாம் செயலாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது.  

  பொதுவாக திட்டமிடுபவர்களுக்கும், அதை செயலாற்றுபவர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. திட்டமிட்டு செயல்படுத்தாதவர்களுக்கும், திட்டமிடாதவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. கர்த்தருக்கென்று திட்டங்களைத் தீட்டுவது நல்லது தான். ஆனால் அதை செயல்படுத்தாத வரை நாமும் திட்டமிடாதவர்களும் சமமாக தான் இருக்கிறோம். இதைத் தான் வேதம், அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும். யாக் 2:17 என்று சொல்கிறது. விசுவாசம் நல்லது தான். ஆனால் கிரியை வேண்டுமே.

  நமது தேவன் இயேசு, நம்மை நேசிப்பதை வெறுமனே வாயினால் சொல்லிக்கொண்டிராமல், சிலுவையிலே நமக்காக மரித்து செயலில் காண்பித்தார். நாமும் தேவனே உம்மை நேசிக்கிறேன் என்று வெறுமனே வாயால் சொல்லிக் கொண்டிராமல் செயலில் காண்பிக்கவேண்டும். ஏனென்றால், தேவனுடைய ராஜ்யம் பேச்சிலேஅல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.1கொரி 4:20.

  யுத்த களத்தில் முந்திப் போகிறவர்களுக்கு தான் வாய்ப்பு
அளிக்கப்படும். முக்கியத்துவம் கொடுக்கப்படும்.  பரிசுகள் வழங்கப்படும். நியாயாதிபதி புத்தகத்திலே 10 ம் அதிகாரம் கடைசி வசனத்தை நாம் வாசித்தோமென்றால், அம்மோன் புத்திரர் மேல் யுத்தம் பண்ண முந்திப் போகிறவனே தலைவனாயிருப்பான் என்று வாசிக்கிறோம். யெப்தா முந்தினான். தலைவனானான். 1நாளாகமம் 11: 6ல் எபூசியரை முறியடிக்கிறதில் எவன் முந்துகிறானோ, அவன் தலைவனாவான் என தாவீது சொல்ல, யோவாப் முந்தி ஏறித் தலைவனானான். கோலியாத்தை பார்த்து பெரும் சேனை நடுங்கிக் கொண்டிருக்க தாவீது விரைந்து செயல்பட்டு கோலியாத்தை வீழ்த்தினான். பினெகாஸ் ஈட்டியை எடுத்துக்கொண்டு விரைந்து செயல்பட்டான். வாதை நிறுத்தப்பட்டது. நாமும் விரைந்து செயல்படுவோம் . கர்த்தரின் ராஜ்யம் கட்டுவோம்.

செயல்படும் கிறிஸ்தவர்களுக்காக, தேவன் வரங்களையும், வல்லமைகளையும் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார். நாளை நாளை என்று நாளைத் தள்ளாதபடி இன்றே எழுந்து செயல்படுவோம், பலவான் கையின் அம்புகளாய்.



பரிசுத்தமாய் வாழ்வது எப்படி?



  


மற்ற எல்லா வயதினரையும் விட வாலிப வயதினர் தான் பரிசுத்தத்தை கவனமாகக் காத்துக் கொள்ளும் அவசியம் இருக்கிறது. மனோபலமும் , உடல்தினவும், எதையும் செய்துபார்க்கும் எண்ணமும், அசாத்தியதுணிவும் வாலிபர்களுக்கு இருப்பதால் வாலிப வயதின் பரிசுத்தம் கேள்விக்குரியதாகி விடுகிறது. இன்றைய நவநாகரீக உலகமும் வாலிபர்களின் பரிசுத்தத்திற்கு வேட்டு வைப்பதற்காகவே முழுமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. பார்க்கிற, கேட்கிற, பழகுகிற எல்லாவற்றிலும் ஆபாசம் கலந்திருக்கும் இவ்வுலகில் வாலிபர்கள் பரிசுத்தமாய் வாழ்வது சாத்தியம் தானா? பரிசுத்தமாய் வாழ்ந்துவிட வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன், ஆனால் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட பாவத்திலே நான் விழுந்து விடுகிறேனே என்று சோர்ந்து போயிருக்கும் வாலிபர்களோடு தேவன் இன்று இடைபடுவாராக..



இன்று அநேக வாலிபர்கள் சொல்வது, என்னுடைய சுற்றுப்புறமும், நான் சார்ந்திருக்கும் நபர்களுமே என் பாவத்திற்கு காரணம் என்று. கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான். (ஏசா 48:14). பாபிலோன் என்பது துன்மார்க்கம் நிறைந்த இடம். எல்லா பாவமும் செய்ய அங்கே வாய்ப்பு உண்டு. ஆனால் கர்த்தருக்குப் பிரியமான ஒருவனால் பாபிலோனில் இருந்துகொண்டும் கர்த்தருடைய சித்தத்தை செய்ய முடியும். நம்முடைய சூழ்நிலையை காரணம் காட்;டி பாவம் செய்து விடக் கூடாது. நாம் எந்த இடத்தில் இருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கிறவர்கள் யாராக இருந்தாலும் நம்மோடு தேவன் இருந்தால் நம்மால் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள முடியும். நீதிமானாகிய லோத்து ( 2 பேதுரு 2:8) என்று சாட்சிபெற்ற லோத்து இருந்த சோதோம் கொமோரா பட்டணங்கள் முழுக்க முழுக்க பாவம் நிறைந்த பூமி. ஆனால் அங்கே இருந்து கொண்டும் லோத்தால் நீதிமான் என்று பெயர் வாங்க முடியுமானால், நம்மாலும் பாவம் நிறைந்த நம் கல்லூரி நண்பர்களின் மத்தியில், பாவம் நிறைந்த அலுவலகத்தில், பாவம் நிறைந்த நம் கிராமத்தில் இருந்துகொண்டும் நீதிமான் என்று பெயர் வாங்கமுடியும். தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்வதெப்படி (ஆதி 39: 9) எனும் யோசேப்பின் மனநிலை நமக்கு வருமானால் பாவத்தை விட்;டு விலகி ஓடக்கூடிய கிருபையை தேவன் நமக்குத் தருவார்.


பாவத்தின் மற்றுமோர் பிறப்பிடம் தனிமை. தனிமை தான் அநேகரின் பாவத்தை உரமிட்டு வளர்க்கிறது. மற்றவர் முன்பாக நாம் நீதிமான் போல் காணப்பட்டாலும் தனிமையிலே பாவத்திடம் தோற்றுப்போய் விடுகிறோம். வாலிப வயதில் தனிமை மிக கவனமான பேணப்படவேண்டியது. சிலரை மிக அழகாக உருவாக்கும். சிலரையோ அதளபாதாளத்திற்குள் தள்ளிவிடும். தனிமை நேரத்தில் சும்மா இருந்தால் பாவம் நம்மைக் கொத்திக் கொண்டு போய்விடும். நமக்கு பிரயோஜனமான ஏதாவதொன்றை செய்துகொண்டேயிருக்க வேண்டும். தேவனோடு உறவாட தனிமை நல்லதொரு தருணம். இயேசுகிறிஸ்து தனியாயிருந்து ஜெபித்தாராம். அதேபோல் நாமும் நம் தனிமையை தேவனோடு உறவாட, வேதத்தை தியானிக்க பயன்படுத்துவோமானால் அந்தரங்கத்தில் பார்க்கிற நம் பிதா நிச்சயமாய் வெளியரங்கமாய் பலனளிப்பார். தனிமையை சரியான விதத்தில் பயன்படுத்த முடியவில்லையென்றால் தனிமையாயிருப்பதைத் தவிருங்கள்.
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.சங் 119:9. வாலிபன் வசனத்தின்படி தன் இருதயத்தைக் காத்துக் கொள்ளும்போது பாவத்திலிருந்து விலகி பரிசுத்தமாகிறான். இருதயத்திற்குள் பாவம் நுழையாமல் இருக்க, அது நுழையும் வழிகளிலெல்லாம் வசனத்தால் காவலிடவேண்டும். உலக காரியங்கள் இருதயத்திற்குள் நுழையும் வழிகள், கண்கள், காதுகள், வாய். கண்களினால் நாம் பார்ப்பது இருதயத்தினுள் நுழைகிறது. காதுகளினால் கேட்பதும் சிந்தையைச் சேர்கிறது. அது போலவே வாயினால் பேசுவதும். வாயினால் நாம் பேசுவது அருகிலிருக்கும் நமது காதுகளுக்குச் செல்வதால்,( சிறுவயதில் வாயினால் சொல்லி சொல்லி படிக்கும்போது அது இருதயத்திற்குள் நுழைந்துவிடுமே). எனவே இம்மூன்று உறுப்புகளுக்கும் வசனத்தினால் காவல்போடும்போது நம் சிந்தையை பாவத்திற்கு விலக்கிப் பாதுகாக்கலாம். எந்த பாவமானாலும் இவ்விடங்களில் இருக்கும் வசனங்களை தாண்டியே உள்நுழைய முடியும்.


பரிசுத்தத்தின் முழுமாதிரியாய் தேவன் இருக்கிறார். நம் பரிசுத்தத்தின்மேல் நம்மை விட அதிக அக்கறையுள்ளவராக அவர் இருக்கிறார். நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று வேதத்தில் அநேக இடத்தில் சொல்லியிருக்கிறார். என்னிடத்தில் யாதொரு குறையும் உங்களால் சொல்லமுடியுமா? என்று தைரியமாக கேள்வியெழுப்பிய பரிசுத்தப்புருஷனாம் இயேசுகிறிஸ்து நம்மை பரிசுத்தராக்குகிற கர்த்தராயிருக்கிறார். எனவே நாம் இயேசுவிடம் நம்மை பரிசுத்தப்படுத்தும்படியாய் கேட்போம். அவர் நம்மை பரிசுத்தமாக்குவார்.  பரிசுத்தத்தை வாஞ்சிப்போம். வேதத்தையும் தேவனையும்
நேசிப்போம். பரிசுத்தத்திற்காக இயேசுவையே சார்ந்திருப்போம். நிச்சயம் நம்மை அவர் பரிசுத்தப்படுத்துவார்.

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும். அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22: 11,12


Saturday, 17 June 2017

காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி?

காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி?


   ஒரு வாலிபனுக்கு அல்லது வாலிபப் பெண்ணுக்கு இந்த உலகிலேயே மிக அதிக வலி ஏற்படுத்துவது காதல் தோல்வி தான்.இது மனதை மட்டுமல்ல உடலையும் கூட பாதிக்கும் சக்தி படைத்தது . செய்யும் எல்லாக் காரியங்களிலும் தங்கள் காதல்துணையையே மையப்படுத்தியே கற்பனை செய்து கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென்று அவர் விலகிச் செல்வது, உலகமே தன்னை விட்டு விலகிச் செல்வது போலத் தோன்றும். அவரின்றி தன்னால் வாழ முடியாது என்கிற இயலாமை ஒருபுறம், இப்படி நம்பவைத்து ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றி விட்டார்களே என்கிற ஆதங்கம் ஒருபுறம், யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத வேதனை ஒருபுறம், குற்ற உணர்ச்சி ஒருபுறம் என்று எல்லாவிதத்திலும் மனதைக் கசக்கிப் பிழியும் வேலையை இது நன்றாகவேச் செய்யும். வாழ்வில் சந்திக்கும் மற்ற எல்லா வேதனைகளைவிட காதல் தோல்வி மிக வித்தியாசமானது. ஈரலைப் பிளக்கக் கூடியது. இருதயம் நின்றுவிடுமோ எனுமளவிலான வேதனை தரக்கூடியது. தற்கொலை மட்டுமே தீர்வாகுமோ என்று தைரியசாலியையும் சந்தேகிக்கப்பட வைப்பது. காதல் செய்து அதில் தோற்று அல்லது காதல் செய்யவைக்கப்பட்டு அதில் தோற்று மனம் வெம்பி இருப்பீர்களானால் உங்களுக்கே உங்களுக்கு தான் இந்த பதிவு. இறுதி வரை படியுங்கள். நீங்களும் வாழலாம்.


காதல் தோல்வி ஏன் இவ்வளவு பெரிய பாதிப்பை இதயத்துக்குள் ஏற்படுத்துகிறது என்று பார்த்தால், மற்ற பாதிப்புகளுக்கும் இப்பாதிப்புக்குமிடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. மற்ற தோல்விகளுக்கும் காதல் தோல்விக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. பொதுவாகவே காதல் என்பது பெற்றோருக்குத் தெரியாததாய் இருக்கும். இது குழுவாக செய்யப்படுவதும் அல்ல. இரண்டே இரண்டு பேருக்கு இடையிலான ரகசிய உறவு. வேறு யாரையும் பங்குபடுத்தாதது. இருவருக்குள்ளும் அவர்களிருவருக்குள் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடிய அநேகம் இருக்கும். காதல் ரசம் சொட்ட பேசி இன்பத்தை அனுபவித்திருப்பார்கள். அந்நிலை திடீரென்று மாறும்போது, இந்த தோல்வியின் தீவிரத்தைப் பகிர்ந்துகொள்ள ஆளிருக்காது. யாருக்குமே முழுதும் புரிந்துவிடாது. பெற்றோரிடம் எல்லாப் பிரச்சனைகளையும் சொல்லிவிடலாம். ஆனால் இதுபற்றி முடியாது. தெரிந்தாலும், உனக்குத் தேவை தான் இது என்கிற கோணத்தில் பார்ப்பார்கள். நண்பர்களாலும் சரி விட்டுவிடு என்று தான் சொல்ல முடியுமே தவிர உதவ முடியாது. 


இருதயத்துக்குள் கற்பனையிலே அடைந்த இன்பமெல்லாம் பொய் என்று தெரியவரும்;போது யாரால் தான் தாங்கிக் கொள்ள முடியும். எதிர்காலத்தைக் குறித்த கற்பனையெல்லாம் மாயை தானா என்பதை நினைக்கவும் மனம் வராது. தனியாக இருக்கும்போதெல்லாம் சிரித்துக் கொண்டிருந்தவர்கள் தனிமையில் எல்லாம் அழ ஆரம்பித்துவிடுவார்கள். தனிமையைத் தேடி தேடிச் சென்றவர்களுக்கு அதே தனிமை தான் நரகமாகத் தெரியும். ஒருவரை நம்பி எல்லாவற்றையும் சொல்லியிருப்போம். அவருக்காக எல்லாம் மாற்றியிருப்போம். எல்லா முக்கிய நிகழ்வையும் பகிர்ந்திருப்போம் . அந்த நபரே இல்லையென்றால்???  எனவே தான் சொல்கிறேன், காதல் தோல்வி மற்ற எல்லாவற்றையும் விட அதிக வலி தரக்கூடியது. இந்த வலியிலிருந்து விடுபடுவது எப்படி? மீண்டு பழைய வாழ்வுக்குத் திரும்புவது எப்படி? 


நீங்கள் யார்?

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விசேஷித்தமானவர்கள். தேவனின் படைப்பு ஒவ்வொன்றுமே விசேஷித்தமானது. உங்களைக் கொண்டு மட்டுமே செய்யப்படவேண்டிய வேலை பல இருக்கிறது. உங்களைப் படைத்ததற்கு சிறப்பான நோக்கம் ஒன்று உண்டு. அப்படியில்லாவிட்டால் உங்களை தேவன் படைத்திருக்க மாட்டார். 30 மில்லியன் அணுக்களோடு போட்டிபோட்டு முந்திப் பிறந்தவர்களல்லவா நீங்கள்? உங்களைப் படைத்த இயேசு உங்களோடு இருக்கும்போது, நீங்கள் ஏன் பயப்படவேண்டும். பாதியிலே வந்த உறவு பாதியிலே சென்றுவிடும். ஆனால் ஆதியிலே, தாயின் கருவில் தோன்றுமுன்னே உங்களை பெயர்சொல்லி அழைத்தவர் இயேசு. (நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். சங் 22:10). அவர் பாதியிலே உங்களை விட்டு விட்டு செல்லமாட்டார். 

ரோமர் 8:28 ன் படி உங்களுக்கு நடப்பது எல்லாமே, இப்போது நன்மையாக இல்லாவிட்டாலும், நன்மைக்கு ஏதுவாகவே நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தேவன் உங்களிடமிருந்து சிலரை அப்புறப்படுத்துகிறார் என்றால், இயேசுவை மட்டுமே நீங்கள் நேசிக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார்.


உங்கள் சூழ்நிலையை மாற்றுங்கள்:

இதுவரை உங்கள் காதல்துணையோடு கற்பனை வாழ்க்கை வாழ்ந்த இடத்தையும், சூழ்நிலையையும் மாற்றுங்கள். அது பழைய நினைவை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் . எந்த இடத்தில் இருந்து அதிக நேரம் உங்கள் காதல் துணையோடு பேசினீர்களோ, அந்த இடத்தை கூடுமானவரைத் தவிர்த்துவிடுங்கள். கொஞ்சக் காலம் உறவினர் வீடுகளுக்கோ, நண்பர் வீடுகளுக்கோ சென்றுவிடுங்கள். ஆண்களாக இருந்தால், வீட்டுக்குள் அடைந்து கிடக்காதீர்கள்(அது உங்களை மனநோயாளியாக்கிவிடும்). பழைய நண்பர்களை சந்தியுங்கள். செல்போனை அதிகம் பயன்படுத்தாதீர்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம், பழைய நினைவு உங்களைக் கொல்லும். காதலிக்கும்போது இருந்த எல்லா சுற்றுப்புற சூழ்நிலையையும் மாற்றுங்கள்.

மனதை பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள்:

பழைய நினைவை அற்றுப்போகப் பண்ணவேண்டுமானால், புதிய நினைவுகளால் இதயத்தை நிரப்புங்கள். இசை கற்றுக்கொள்ளுங்கள், பாடுங்கள், விளையாடுங்கள், செஸ் விளையாடுங்கள், வேதாகமத்தை படியுங்கள், தியானியுங்கள். இதுபோல் ஏதாவது ஒன்று செய்துகொண்டே இருப்போமென்றால், நம் மனதை பழைய காயத்தை நினைக்காமல் பாதுகாக்கலாம். ஏதாவதொன்று செய்துகொண்டே இருங்கள். உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். அமைதியாக, மௌனமாக இருக்காதீர்கள். சுறுசுறுப்பாக இருங்கள்.

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்:

காதலித்த நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ள உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம். எந்நேரமும் காதலிலேயே மூழ்கியிருந்திருப்போம். இனிமேல் சுற்றியுள்ள உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சிறுபிள்ளைகளோடு விளையாடுங்கள். எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் (பிலி 4:4). விடுபட்ட உறவைத் தேடிச் செல்லுங்கள். புதிய உறவுகளை உருவாக்குங்கள். 

காலம் மாற்றும் காயம் ஆற்றும்:

எப்போதுமே எல்லா பிரச்சினைகளுக்கும் காலம் பதில் வைத்திருக்கும். நமது காலங்கள் தேவனுடைய கரத்தில் இருக்கிறது. எனவே  உடனே அவசரப்பட்டு எந்த தவறான முடிவும் எடுத்துவிடாமல், நிதானமாக இருங்கள். உங்கள் இருதயத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்தை, காலம் மெது மெதுவாக ஆற்றி விடும். நன்றாக யோசித்துப் பாருங்கள், நம் சிறுவயதிலிருந்து நமக்கு ஏற்பட்டிருக்கும் காயங்கள் எல்லாம் எங்கே என்று. காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிட்டது. இப்போது பெரிய பிரச்சினையாக தெரிவது, ஒருகாலத்தில் ஒன்றுமில்லாமல் போகலாம். சிலநேரங்களில் நகைச்சுவையாகவும் ஆகிவிடலாம். எனவே தேவனின் கரத்திலிருக்கும் காலத்தின் போக்கில் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்.

வேதமே வெளிச்சம்:

வேதம் படியுங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதாகமம் வாசிப்பது சற்று சிரமமாகத் தான் இருக்கும். ஆனாலும் வைராக்கியமாக வாசித்தால், நிச்சயமாக தேவன் நம்மோடு இடைபடுவார். வசனம் நம்மை ஆற்றும். வேதவசனத்தில் ஜீவன் இருக்கிறது. அது நம் ஜீவனோடு இணையும். புதுபலன் உண்டாகும். எனவே வேதத்தை வாசியுங்கள், நேசியுங்கள், சுவாசியுங்கள். ஈசாக்கு தியானம் செய்து கொண்டிருந்தார், தேவன் அவருக்குக் கொடுத்த மனைவி, ஈசாக்கின் தாயின் இறப்பில் ஈசாக்கு வைத்திருந்த துக்கத்திலிருந்தும் ஆறுதல் கொடுக்குமளவு அவரை நேசித்தார். எனவே நாம் வேதத்தின் மேலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும்போது, அவர் நமக்கு தரும் வாழ்க்கைத் துணை வேதத்தின்படியே வாழ்கிற, நம்மை முழுதும் நேசிக்கிற வாழ்க்கைத் துணையாக அமையும்.

எல்லாவற்றையும் அழித்துவிடுங்கள்:

உங்கள் காதல் துணையைப் பற்றி நினைவுபடுத்தும் எல்லாவற்றையுமே முழுவதுமாய் அழித்துவிடுங்கள். அவை ஒவ்வொன்றும் உங்களை
அழவைத்துக்கொண்டே இருக்கும். அவர் அனுப்பிய குறுஞ்செய்தி முதல் பரிசு வரை எல்லாவற்றையும் அப்புறப்படுத்துங்கள். சிரித்தபடி இருக்கும் புகைப்படங்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்துங்கள். அவர்களின் சிரித்தமுகம் தான், இனிமேல் உங்களை அழவைத்துக் கொண்டே இருக்கும். ஒருவேளை மீண்டும் இணைந்தால் தேவைப்படும் என்று எதையும் மீதம் வைக்காதீர்கள். இப்படிப்பட்;ட எண்ணம் தான் உங்களை மேலும் பலவீனமாக்கும். உங்களை வேண்டாம் என்று சொன்னவர்கள், இனி ஒருபோதும் உங்களுக்கு வேண்டாம். அவர்கள் தான் உங்களுக்கு என்று தேவன் முடிவு செய்தால் திருமணத்தில் இணைப்பார். ஆனால் இனியும் அவரைப் பற்றி நினைக்க தேவையில்லை.

தன்னம்பிக்கை:

உங்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துங்கள். உங்களால் அவர்கள் இல்லாமலும் வாழமுடியும் என்று நம்புங்கள். உங்கள் தனித்திறமையை வளர்ப்பதில் நேரம் செலவிடுங்கள். தன்னம்பிக்கை வளர ஜெபியுங்கள்.வேதம் தியானியுங்கள். வேகமாய் ஓடுங்கள். பின்னோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி ஓடுங்கள்.
துரதிருஷ்டசாலி:

உங்களைப் பற்றிய உங்களின் நல்மதிப்பை அதிகரியுங்கள். உங்களை இன்னும் ஆழமாய் நேசியுங்கள். உன்னை நேசிப்பதுபோல் பிறனையும் நேசிக்கவேண்டும் (லேவி 19:18) என்று வேதம் சொல்லியிருக்கிறது. எனவே நம்மை முதலில் நன்றாக நேசிக்கவேண்டும். நம்மை இழந்ததால் நம்மை விட அவர்களுக்குத் தான் இழப்பு அதிகம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் காதல் தோல்வியால் வாடுவதற்கு காரணமே, உங்கள் துணையின் மேல் நீங்கள் வைத்த அளவில்லாத அன்பு தான். எனவே இத்தகைய அன்பை இழந்துவிட்ட அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று விட்டுவிடுங்கள்.

எதிர்காலம் இயேசுவுக்கே:

போனது போகட்டும். தேவனிடம் போய் மன்னிப்பு கேளுங்கள். அவர் நிச்சயம் உங்களை ஏற்றுக்கொள்வார். மனம்விட்டுப்; பேசுங்கள். எதிர்காலத்தை இயேசுவிடம் ஒப்படையுங்கள். அவர் பார்த்துக்கொள்வார். நம் வாழ்வின் மிகவும் முக்கிய பகுதியான வாலிபப் பகுதியை அவரிடம் ஒப்படைத்தால், எஞ்சியுள்ள நம் வாழ்க்கையை எல்லாம் தேவன் பொறுப்பெடுத்துக்கொள்வார்.

எல்லாம் நன்மைக்கே:

ரோமர் 8:28ன் படி தேவன் நம்முடைய வாழ்வில் செய்யும் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாகவே செய்கிறார். திருமணத்திற்கு முன்பாகவே காதல் துணையின் வேஷத்தை தேவன் கலைத்தது நன்மைக்குத்தான். உங்களுக்கான சரியான துணையை தேவன் சரியான நேரத்தில் தருவார். ஒருவேளை திருமணம் நடந்தபின் அவர்களின் நிலையற்றத் தன்மை உங்களுக்குத் தெரிய வந்திருந்தாலும் பிரயோஜனம் இருந்திருக்காது. இவ்வளவு நாள் வீணாகி விட்டதே என்று கவலைப்படாதிருங்கள். நீங்கள் மிகப்பெரிய பாடம் கற்றிருக்கிறீர்கள். அனுபவப்பாடம் கற்ற நாள் ஒன்றும் வீணானதல்ல. தேவனை விடவும் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தவறென்று அறிந்திருக்கிறீர்கள். நிலையான சந்தோஷம் இயேசுவிடம் மட்டுமே உண்டு என்பதை உணர்ந்திருக்கிறீர்கள். இனி மீதமுள்ள நாட்களில் ஏமாற்றப்படாமல் வாழ்வது எப்படி என்று பழகியிருக்கிறீர்கள் . எனவே நாட்கள் வீணாகவில்லை. நடந்ததும் , நடப்பதும் , நடக்கப்போவதும் எல்லாம் நன்மைக்கே.

வேறொருவரைத் தேடிச் செல்லாதீர்கள்:

வேதாகமத்தில் நாம் பார்க்கும்போது, (நியாதிபதிகள் 14,15,16) சிம்சோன் பெலிஸ்தியரிலே பெண் எடுத்தான். அது தேவசித்தமாயிருந்தது. ஆனால் அந்த இல்லற வாழ்வில் தோற்றபிறகு, தெலீலாள் என்னும் இன்னொரு பெண்ணோடே சிநேகமாயிருந்தான். அதுவே அவனது மரணத்திற்கு காரணமாயிற்று. பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கவே பிறந்தவன், சிம்சோன். தன் முதல் வாழ்க்கைத் துணையை அவன் தேர்வுசெய்ததும், அதில் தோற்றுப்போனதும் (பெலிஸ்தியரைக் கொல்லும்படியான) தேவசித்தமே. ஆனால் சிம்சோன் செய்த மிகப்பெரிய தவறு, அந்த பெலிஸ்திய ஸ்தீரிக்கு மாற்றாக தெலீலாளைத் தேர்ந்தெடுத்தது தான். எனவே, இதுவரை நடந்தது தேவசித்தம் என்று விட்டுவிடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும், பழையவர்களை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு வேறொரு பெண்ணிடமோ, ஆணிடமோ காதல் வயப்பட்டுவிடாதீர்கள். அது உங்களையே பழிவாங்குவதற்கு சமம். நீங்கள் காதல் தோல்வியில் இருப்பதைப் புரிந்து கொண்டு இடைவெளியை நிரப்ப பலர் நுழைவார்கள்.  கவனம் ... கவனம் நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. தேவனை நேசிக்க அவர் ஏற்படுத்திக் கொடுத்த நல்ல வாய்ப்பாக மனதில் கொண்டு, அவரையே நேசியுங்கள்.

தேவன் உங்கள் வாழ்க்கையில் அனுமதித்த கசப்பான அனுபவத்திலிருந்து முற்றிலும் வெளிவந்து, இதே நிலையிலிருக்கும் பலருக்கு ஒளியாய்த் திகழ வாழ்த்துக்கள். 


உங்களை மறந்து போனவர்கள் நிமிர்ந்து பார்ப்பார்கள்.


ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து. ஆமென்.

Wednesday, 14 June 2017

"ஐயோ தீ!"

பஞ்ச பூதங்களில் நாம் மிகவும் அஞ்சுவது நெருப்புக்குத்தான். ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று வசனம் பேசுபவன் கூட நெருப்பால் சாவு என்றால் கொலை நடுங்குவான். மனிதன் இயற்கையை எப்படி தான் திரித்தாலும், நெருப்பிடம் மட்டும்; அவன் பருப்பு வேகவில்லை. நெருப்பு தனக்குமுன் இருக்கும் எல்லாவற்றையுமே அழிக்கக் கூடியது. சரி இப்போது நெருப்பின் பெருமையை பேச வேண்டிய அவசியம் என்ன? இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் 2017 ஜுன் 14ம் தேதி மட்டுமே தொலைக்காட்சியில் பல தீ விபத்துக்கள். லண்டனில் 27 மாடிக்கட்டிடம் எரிந்தது. தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் எரிந்தது. விறகு வைத்திருந்த குடோன் எரிந்து நாசமானது. சில நாட்களுக்கு முன் பெரிய துணிக்கடை முழுவதுமாக எரிந்து முடித்தது.

தீ விபத்துக்கள் எப்போதும் நடப்பது தானே , அதை அணைக்கத் தானே தீயணைப்பு என்ற தனித்துறையே இருக்கிறது என்று நினைப்பீர்களென்றால், அதற்கான பதில், முன்னெப்போதையும் விட இப்போது தீ விபத்துகள் அதிகமாகியிருக்கின்றன. 

முன்பு தீ எரிந்தால், வைக்கோல் போரிலோ,

ஓலை வீடுகளிலோ ,சருகுகளிலோ பற்றி எரியும். சில மணிநேரங்களில் எரிந்து முடிந்து கரியாகிவிடும். எல்லாம் கரியாகவும் ,சரியாக தீயணைக்கும் கருவியோடு வீரர்கள் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல. நாள் கணக்கில் நின்று எரிந்து கொண்டிருக்கிறது. அமைச்சரே சென்று எரிவதைப் பார்க்குமளவு அவகாசம் ஏற்பட்டிருக்கிறது. எரிவதும் சாதாரண ஓலைப்பந்தலல்ல, பெரிய கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள். இவையெல்லாம் ஏன் எரிகின்றன?

ஏன் எரிகின்றது என்று கேட்டால் பல காரணம் பல்லைக் காட்டும். ஐடி ரெய்டுக்காக எரிக்கப்படுகிறது, பொறாமையால் எரிக்கப் படுகிறது, ரகசியங்களை காக்க எரிக்கப்படுகிறது, மின்கசிவு, கவனக்குறைவு. காரணங்களை வரிசைப் படுத்திக் கொண்டே போகலாம். ஆனால், ஏன் இப்படி நின்று எரிகிறது. தீ சில நிமிடங்களில் எல்லாவற்றையும் வசப்படுத்தி எரிந்து கருக்கி அதுவாகவே அணைந்துவிடும். ஆனால் சமீப காலங்களில் எரிந்துகொண்டேயிருக்கிறதே ஏன்?

எரிகிறது என்று சொல்வதை விடவும் உருகுகிறது எனலாம். எது உருகும்.  பூமிக்கடியில் இருக்கிறவைகளை எல்லாம் எடுத்து பிளாஸ்டிக் உட்பட பல பொருள் மூலங்களை மனிதன் இந்;த நூற்றாண்;டில் செய்ய ஆரம்பித்து விட்டான். நாம் பயன்படுத்தும் எல்லாம் பிளாஸ்டிக் மயம். இவை பெரும்பாலும் உருகக்கூடியவை.  பூமி முழுதும் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது ( 2 பேதுரு 3:7) நாம்; அறிந்ததே. அதற்கேற்ப அக்கினி எளிதில் பற்றிக்கொள்ளக் கூடியதும், எளிதில் அணைக்க முடியாமல் நெடுநேரம் எரியக் கூடியதும், உருகக் கூடியதுமான பொருட்களை பூமி முழுதும் பரப்பி வைத்திருக்கிறான்.

மனிதனின் இந்த செயல்தான் வழக்கம்போல் மனித இனத்துக்கே வினை வைக்கிறது. திடீர் திடீர் என்று ஏதாவது எரிகிறது. அணைத்தால் அடுத்த இடத்தில் எரிகிறது. 2பேதுரு 3:10,12 ன் படி பூதங்கள் உருகுகிறது. முன்பு உருகும் பொருள் ஒன்றுமே பூமியின் மேல் இருக்காது. இப்போது பெரும்பாலானவை உருகக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களே. பூமி எரிந்து அழிகின்றது. 

இப்போது நடக்கும் பல தீ விபத்துகளில் பெருமளவில் உயிரிழப்புகள் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். ஆனால் அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை என்னவென்றால், இது ஆரம்பம் மட்டுமே. சொல்லப்போனால் ட்ரெய்லர் தான். இன்னும் அநேக இடங்கள் திடீர் திடீர் என்று பற்றியெறியும். அதற்குத் தோதாக மனிதன் தன்னையேயறியாமல் அணு உலைகள், மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் என்று கட்டிவைத்திருக்கிறான். போதாக்குறைக்கு ஒவ்வொரு நாடும், ஆயுதப் பரிசோதனை நடத்திக்கொண்டிருக்கின்றது. அனைத்து ஆயுதங்களுமே நெருப்பின் வகைகளைக் கக்குபவை தான்.கட்டுப்பாட்டை மீறும் தீவிபத்துகள் நடக்கலாம். ஐயோ இப்படி பயமுறுத்துகிறீர்களே என்று பயப்படாதீர்கள். எப்போதுமே வருமுன் காப்பது சிறந்தது. விஞ்ஞானிகளுக்கும் நெருப்பிலிருந்து தப்ப வைப்பது தான் பெரிய சவாலாக இருக்கிறது. நெருப்பால் சேதம் வராமல் தடுக்க தங்களாலான எல்லா முயற்சிகளையும் முன்பைவிட அதிகம் எடுக்கிறார்கள் என்பதிலேயே , நெருப்பின் விபரீதத்தை அவர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பது தெரிகிறது.
ஏன் இப்படி நடக்கிறது. இரண்டு காரணங்கள். நரகம் முழுக்க முழுக்க நெருப்பாலும் கந்தகத்தாலும் ஆனது. எனவே நெருப்பால் ஏற்படும் சேதத்தைப் பார்ப்பவர்கள் திருந்த வாய்ப்புண்டு. இன்னொன்று, இந்த பூமி ஏற்கனவே நீரால் அழிந்தது . இனி நீரால் அழிக்கமாட்டேன் என்று தேவன் நோவாவோடு ஒரு உடன்படிக்கை செய்தார். இது நெருப்பால் தான் அழியப் போகிறது. அதற்கான திட்டங்கள் மனிதக்கரங்களாலேயே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நினைத்துப் பாருங்கள் மொத்த உலகமும் கொத்தாக எரிவதை. 

நாம் பயப்படவேண்டியதில்லை. நம்முடைய வேலையெல்லாம், ஆயத்தப்படுவதும் ஆயத்தப்படுத்துவதும் தான். கடைசிக் காலத்திற்கான ஒவ்வொரு அடையாளத்தை நாம் பார்க்கும்பொழுதும், நமக்கு நினைவுக்கு வரவேண்டிய வசனம், அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும். அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.வெளி 22:11


குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள். கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். சங் 2:12



பிறந்தவர் யார்?

   
 உலகம் முழுவதும் வெகு விமரிசையாய்க் கொண்டாடப்படும் பெரிய பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா? கூடாதா? என கிறிஸ்தவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்க, கிறிஸ்துவை அறியாதோரிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. காலத்தை சிலர் கச்சிதமாய்ப் பயன்படுத்தி இயேசு பற்றிய சுவிசேஷத்தை அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். சிலரோ தங்கள்ஆடம்பரத்தை இயேசுவுக்கே அறிவித்துக் கொண்டிருக்கின்றனர்.  இயேசுவின் பெயரால் உதவிகள் செய்யப்படுகின்றன. சில கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த சபையையே தேடி அலைந்து கண்டுபிடித்தமர்கின்றனர்.  எது எப்படியோ கிறிஸ்து பிறந்தாரென்பது முழு நிச்சயமான உண்மை. அவர் எப்போது பிறந்தாரென்பது நமக்கு தெரியாது.  ஆனால் ஏன் பிறந்தாரென்று தெரியும். அவர் எந்த சூழ்;நிலையில் பிறந்தாரென்பது தெரியாது, எந்த சூழ்நிலையை உருவாக்கப் பிறந்தாரென்று வேதம் வாயிலாகக் கற்கிறோம். அவர் பிறந்த நாளென்று உலகம் ஒரு நாளை சொல்கிறது. அந்த நாளில் பிறந்தாரோ இல்லையோ அவர் பிறந்தார். எனவே இப்படிப்பட்ட நாட்கள் மூலம் அவர் பிறப்பு தியானிக்கப்படுகிறது. அவர் பிறப்பைப் பற்றி பேசப்படுகிறது. வித்தியாசப்பட்ட கோணங்களில் அவர் பிறப்பு அலசப்படுகிறது. அவர் பிறந்ததற்கான நோக்கமும் சில இடங்களில் ஆராயப்படுகிறது. எப்படியோ கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் . அதனால் நான் சந்தோஷப்படுகிறேன் (பிலி 1:18).  பீடிகையை வைத்து நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம் . நானும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, உங்கள் கவனத்தைப் பெற்று,  அவர் பிறப்பைப் பற்றி பேசப்போகிறேன்.

                   நம்முடைய தியானம் சற்று வித்தியாசமானது. அவர் ஏன் பிறந்தார்? எங்கு பிறந்தார்? எப்போது பிறந்தார்?  எதற்கு பிறந்தார்? எப்படி பிறந்தார்? யாருக்காக பிறந்தார்?  இப்படி எல்லாம் பல கோணங்களில் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே தியானிக்கப்பட்டு வருகிறது. கேள்வி வகைகளில் மிச்சமிருக்கும் ஒன்று, அதிகம் தியானிக்கப்படாத ஒன்று ? எது.  பலே . நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்.  அது தான். நீங்கள் நினைப்பது சரிதான். யார் பிறந்தார்? என்பது தான். என்ன பிரதர் இதெல்லாம் ஒரு கேள்வியா? யார் பிறந்தார்னு தெரியாமலா இருக்கோம்?  இயேசு தானே பிறந்தார். இதச் சொல்ல வந்துட்டீங்களாக்கும். இப்படி நினைக்கிறீர்கள். பிறந்தவர் யார்? என்றால் 5 வயது பிள்ளையும் சொல்லும் இயேசு என்று. இப்போது இதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்கிறேன். இந்த இயேசு யார்?

                  இப்போது தெளிவாக கட்டுரையின் கருத்திற்கு வருகிறேன். நமக்காக பிறந்தவர் இயேசு என்று தெரியும். நமக்காக பிறந்தவர் குமாரனா? அல்லது பிதாவா?.. அதிர்ச்சியாக இருக்கும் சிலருக்கு. இதெல்லாம் ஒரு கேள்வியா? நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். குமாரன் கொடுக்கப்பட்டார் (ஏசாயா 9:6) என்று ஒவ்வொரு கிறிஸ்துமஸ்ஸிலும் வாசிக்கிறோம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.யோவா 3:16. இது எல்லாருக்கும் தெரிந்த வசனம். மேலும் நாம் அடிக்கடி வாசிக்கிற வசனம், மத்தேயு 1:21 , அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். இது போல் இன்னும் பல வசனங்கள் இருக்கிறது. எனவே நமக்கு தெரிந்திருந்த  ஒரு விஷயம் , பிறந்தவர் குமாரனே என்று. 

                  இந்த உலகத்தில் பிறக்கும் அனைவருமே குமாரர்கள் தான். இந்த உலகத்தில் நாம் பிறந்தாலே நாம் குமாரர் தான். நாம் நம் தாய் தந்தையர்க்கு குமாரர் , குமாரத்திகளாக இந்த உலகத்தில் பிறக்கிறோம். லூக்கா 3 : 22 முதல் 38 வரை வாசித்தால் இதன் விளக்கம் புரியும். இந்த உலகத்தில் பிறந்த நாமனைவரும் குமாரர்களாய் இருக்கிறோம். மாம்ச சரீரத்தில் நாம் பிறக்கும்போதே நாம் குமாரர்களாகி விடுகிறோம். எனவே மாம்ச சரீரத்தில் இந்த உலகில் நமக்காக பிறந்த இயேசுவும் குமாரன் என்பதில் சந்தேகமில்லை. இப்போது மறுபடியும் கேட்கிறேன், பிறந்தவர் யார்? யார் பிறந்தார்? குமாரனாக இந்த உலகில் வந்து பிறந்தவர் யார்? அவர் ஏற்கனவே குமாரனாக இருந்தவர் தானா? அல்லது வேறொரு ஸ்தானத்திலிருந்து , மண்ணில் வந்ததால் குமாரன் ஆகிறாரா? அது உண்மையென்றால், அவர் இயேசு என்னும் பெயரில் மண்ணில் பிறக்கும் முன் அவர் யார்? குழப்புவது போல் இருந்தால் மீண்டும் ஒருமுறை பதிவைப் படியுங்கள்.

                  பொதுவாகவே இரகசியம் என்பதன் அர்த்தம், அனைவருக்கும் தெரியாதது, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிவது. எல்லாருக்கும் தெரிந்திருந்தால், அது இரகசியம் அல்ல. உரிமையான சிலருக்கு மட்டும், தெரிவது தான்இரகசியம். இரகசியத்தைக் கண்டுபிடிக்க நாம் சற்று முயற்சி எடுக்க வேண்டும். வேதத்திலேயும் அநேக இரகசியங்கள் இருக்கிறது. அது தெரிந்தால் தான், நமக்காக பிறந்த இயேசு யார் என்று நாம் அறிந்துகொள்ள முடியும். வேதத்திலே, 1 தீமோத்தேயு 3:16 ல் ,அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது, யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது . என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த மேன்மையான, தேவபக்திக்குரிய இரகசியம் என்னவென்றால், தொடர்ந்து வாசிக்கும்போது தெரிகிறது,தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.1தீமோ 3:16. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். ஆமென். நாம் அறிந்துகொள்ளவேண்டிய இரகசியம். நம் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். நமக்கு இருப்பது எத்தனை தேவர்கள்? இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.உபா 6:4. ஒரே தேவன் உண்டு. அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை (மாற் 12:32). நமக்கு ஒரே ஒரு தேவன் உண்டு. அவர் யார்? அவர் தான் பிதா. யோவான் 8: 41 ஒரே பிதா எங்களுக்குண்டு. அவர் தேவன். இன்னும் அநேக வசனங்கள் இருக்கிறது. எனவே பிதா தான் தேவன்.  தேவன் தான் பிதா. இப்போது 1தீமோத்தேயு 3: 16 ஐ நாம் இரகசியம் அறிந்தவர்களாய் வாசிப்போமானால், பிதாவாகிய தேவன், மாம்சத்தில் இயேசுவாக வெளிப்பட்டார். அல்லேலூயா.

                  கிறிஸ்துமஸ் பிறப்பின்போதெல்லாம் நாம் வாசிக்கும் வசனம், ஏசாயா 9:6, நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். இந்த வசனத்தை நன்றாக கவனித்தீர்களா? பாலகன் பிறந்தார், குமாரன் கொடுக்கப்பட்டார் என்று சொல்லிவிட்டு இறுதியில் சொல்கிறது, அவர் நித்திய பிதா என்று. நித்திய பிதா என்றால் என்ன? நித்திய நித்தியமாக அவரே பிதா. குறிப்பிட்ட காலத்துக்கு அல்ல. எல்லா காலத்திற்கும். அந்த பிதா யாரென்றால், அவர் தான் கொடுக்கப்பட்ட குமாரன்.  இன்னொரு வகையில் சொல்வதென்றால், குமாரனாம் இயேசுகிறிஸ்து தான் பிதா.

                  பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார் (எபி 2:14). பிள்ளைகளாகிய நாம் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, நம்மை படைத்த பிதாவாகிய அவரும், நம்மைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடைய இயேசுவானார். பிள்ளைகள் என்று சொல்லப்பட்டிருப்பதால், அவர் என்ற பதம் பிதா என்றாகிறது. (உதாரணம், வேலையாள் என்று வந்திருந்தால், அவர் - எஜமான்) பிதாவாகிய அவர், பிள்ளைகளாகிய (குமாரர்களாகிய) நமக்காக, குமாரரானார். அல்லேலூயா.  ஆதியிலே வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவன், நம் மேல் நேசமாயிருந்து அவரது குமாரனை அனுப்பினார் என்பதையே அவரது அன்பின் அடையாளமாய் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவரே நமக்காக இறங்கி வந்து , நம்மை குனிந்து தூக்கினாரென்பது எவ்வளவு ஆச்சரியம். வேறொருவரை அனுப்பாமல் அவரே இறங்கி வந்து நம்மை நேசித்தார் அவர்.

                  இப்போது கேட்கிறேன், பிறந்தது யார்? குமாரனா? பிதாவா? . ஆம் நமக்காக பிறந்தது பிதாவே. அவர் நித்திய பிதா.  நமக்கு ஒரே ஒரு தேவன் உண்டு. அவர் மாம்சத்திலே இயேசுவாக வெளிப்பட்டார். இருவரும் தனித்தனி நபரல்ல. ஒருவரே. அதனால் தான், தேவன் ஒருவரே செய்யமுடிந்த காரியங்களை இயேசு செய்தார். 1ராஜாக்கள் 8:40 , தேவன் ஒருவரே மற்றவர்களின் இருதயத்தை அறியமுடியும். இயேசு அறிந்தார் . யோபு 9:8,ல் தேவன் ஒருவரே சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர் என்று பார்க்கிறோம். இயேசு நடந்தார். தேவன் ஒருவரே பாவங்களை மன்னிக்க முடியும் .இயேசு மன்னித்தார் (லூக் 5:21) 1கொரி 8: 4ன் படி ஒருவரையல்லாமல் வேறொரு தேவன் இல்லையென்று அறிந்திருக்கிறோம். நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். யாக் 4:12. நியாயப்பிரமாணத்தை கட்டளையிட்டவர் பிதா. அவர் ஒருவரே இரட்சிக்கவும் (இரட்சகர் இயேசுவாக) அழிக்கவும் (நியாதிபதி இயேசுவாக)வல்லவர். என் மகிமையை வேறொருவனுக்கும் கொடேன் (ஏசா 42:8) என்று சொல்லியிருக்க, பிதாவின் மகிமையில் இயேசு வருவதின் (லூக்கா 9:26) இரகசியமும் இதுதான்.

                  எனவே நமக்காக பிறந்தவர் யாரென்பதை நாம் அறிந்துகொள்வது மிக அவசியம். என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் (ரோமர் 9:5) இயேசுவாக நம் மத்தியிலே பிறந்திருப்பது மிகப் பெரும் ஆச்சரியம்.  அவர் பிறந்தது நமக்காக. வளர்ந்தது நமக்காக. மரித்ததும், உயிர்த்ததும் நமக்காக. இன்றும் நம்மை பரிசுத்த ஆவியாய் பரிவோடு நடத்துகிறார். அவர் ஒருவருக்கே சகல கனமும் வல்லமையும் துதியும் உண்டாவதாக . ஆமென். அல்லேலூயா.